கொட்டகலையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று சகல தடைகளையும் நீக்கும் கடவுளான விநாயகரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்றைய தினம் (31.08.2025) கொட்டகலையில் மேளதாளம் முழங்க ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் விநாயகர் ஊர்வலம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
விநாயகர் சிலைகள் ஊர்வலம்
குறிப்பாக பத்து இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு பெரிய மண்வெட்டி தோட்ட ஆலய முன்றலில் இருந்து ஆரம்பித்து (கொட்டகலை பிரதேச சபை ஊடாக பிரதான வீதியில்) விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொட்டகலை ஆற்றங்கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பின்னர் ஒவ்வொரு சிலைகளாக ஆற்றில் கரைக்கப்பட்டது. இதன்போது அங்கு விசேட பூஜைகள், பஜனை, சிறப்பு சொற்பொழிவுகள் என்பனவும் நடைபெற்றது.
பங்கேற்ற பெருந்திரளான பக்தர்கள்
குறித்த விநாயகர் சதுர்த்தி விழாவிலும், பிள்ளையார் ஊர்வலத்திலும் பெருந்திரளான பக்தர்களும் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டனர்.
















