திருகோணேஸ்வரம் ஆலய விவகாரம்: சர்வமத தலைவர்கள் மௌனம் காப்பது ஏன்!-சபா குகதாஸ்
“திருகோணேஸ்வரம் ஆலய வரலாற்றை திட்டமிட்டு இலங்கை அரசாங்கம் மாற்றியமைக்க மேற்கொள்ளும் முயற்சியை தடுக்க சர்வமத தலைவர்கள் தலையிடாமல் இருப்பது ஏன்” என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் நேற்று (13.10.2022) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
திருகோணேஸ்வரம் சிவாலயம்
”இலங்கையில் புராதன பஞ்ச ஈச்சரங்களில் பாடல் பெற்ற தலம் திருமலையில் அமைந்துள்ள திருகோணேஸ்வரம் சிவாலயம் எல்லோரும் அறிந்த வரலாற்றுப் பெருமைகளை கொண்டது.
இவ்வாறு இருக்கையில் திட்டமிட்டு இலங்கை அரசாங்கம் அதன் வரலாற்றை மாற்றியமைக்க மேற்கொள்ளும் முயற்சியை தடுக்க சர்வமத தலைவர்கள் தலையிடாமல் இருப்பது ஏன்.
மௌனம் காப்பது நல்லதல்ல என சைவ மக்கள் வேதனைப்படுகின்றனர்.
கடைகள் அமைக்கும் வேலைத்திட்டம்
திருகோணேஸ்வரம் கோயில் வளாகத்தில் கடைகள் அமைக்கும் வேலைத்திட்டம் விரிவடைந்து கடலை நோக்கி அமைந்துள்ள கோவிற் பகுதியின் கீழ் உள்ள கடற்பகுதியை ஆய்வு என்ற போர்வையில் அகழ்ந்து எடுப்பதற்கு தொல்லியல் திணைக்களம் முயற்சிக்கின்றது.
இது திட்டமிட்ட சதி நடவடிக்கையாக அரச பின்புலத்தில் நிகழ்த்தப்படுகின்றது.
பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு இனத்தினதும் இன மற்றும் மத அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதுவே ஐனநாயகம் இதனை மாற்றியமைக்கும்
ஆட்சியாளர்களை தடுத்து நிறுத்த சர்வமத தலைவர்கள் முன் வர வேண்டும்” என அவ்அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



