கொக்குத்தொடுவாய் வழக்கு இடம்பெற்ற வேளை நீதிமன்ற சூழலில் புலனாய்வாளர்கள் கண்காணிப்பு
முல்லைத்தீவு நீதிமன்றில் நேற்றைய தினம்(08) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றது.
இதன்போது நீதி மன்றத்துக்கு முன்பாக உள்ள வீதியில் சிவில் உடை தரித்த இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் அரச புலனாய்வாளர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் வருகைதந்து வழக்கு விசாரணைக்காக வருகைதந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அச்சுறுத்தும் வகையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்காணிப்பு நடவடிக்கை
அத்தோடு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரியிடம் நேரடியாக வருகை தந்து இன்றைய தினம் என்ன வழக்கு விசாரணை நடைபெறுகிறது, என்ன வழக்குக்காக நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளீர்கள் என்றவாறு புலனாய்வாளர் ஒருவர் கேள்வி எழுப்பி அச்சுறுத்தியுள்ளார் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது மகன் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் ஆட்க்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தாய்மார் சிலர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகி தமது சாட்சியத்தை நீதிமன்றில் பதிவு செய்திருந்தனர் .
குறித்த சாட்சியங்களை நீதிமன்றில் பாதிக்கப்பட்டவர்கள் வழங்கி கொண்டிருந்த வேளை நீதிமன்றுக்கு முன்பாக புலனாய்வாளர்கள் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அச்சுறுத்தல் நடவடிக்கைகள்
இந்த புலனாய்வு அச்சுறுத்தல் தொடர்பில் இந்த வழக்கு விசாரணையை பார்வையிடுவதற்காக வந்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அதாவது , இன்று நீதிமன்றத்திலே கொக்குத்தொடுவாய் புதைகுழி தொடர்பான வழக்கு நடைபெற்றிருக்கிறது.இத்தகைய வேளையிலே நீதிமன்றுக்கு முன்பாக அரச புலனாய்வு பிரிவினரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் தான் இங்கே நிறைந்திருப்பதை காணக்கூடியவாறு உள்ளது.
இந்த இடத்தை கடந்து நீதிமன்றுக்குள் செல்கின்ற போது நாங்கள் கூட மிகவும் ஒரு பதட்டமான சூழலுக்குள்ளேதான் இருக்கின்றோம். இந்த விசாரணைகள் தொடர்பாக எவரும் வாய் திறக்க முடியாத ஒரு நிலைமையை பேணவேண்டும் என்பதிலே அரசு குறியாக இருக்கிறது இந்த கண்காணிப்பு அச்சுறுத்தல் நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |