சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலைக் குறைக்க நாடாளுமன்ற மேற்பார்வைக்குழு ஆலோசனை
சமீபத்தில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் எதிரொலியாக சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலைக் குறைப்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் இலங்கையின் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைத்தல், நிர்வாகச் செயற்திறனை மேம்படுத்துதல் மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துதல் குறித்து, 'ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு'வில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நஜித் இந்திக தலைமையில், நாடாளுமன்றத்தில் கூடிய இக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
நடவடிக்கைகள்
அதன்போது சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், புதிய கட்டடங்களை நிர்மாணித்தல், தற்போதுள்ள வசதிகளை மறுசீரமைத்தல், சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் கைதிகளைத் திறம்பட நிர்வகிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆழமாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகப் புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுதல், சேவை தேவைகளுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு நடைமுறைகளைத் திருத்தியமைத்தல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் சேவை நிலைமைகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் குழுவின் உறுப்பினர்கள் கவனம் செலுத்தியிருந்தனர்.
சிறைச்சாலைகள் திணைக்களம்
போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் தாமதத்தைத் தவிர்ப்பதற்காக, குறித்த திணைக்களத்தின் திறனை அதிகரித்தல், நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதன் அவசியம் குறித்தும் குழு வலியுறுத்தியுள்ளது.

சிறைச்சாலை நெரிசலைக் கட்டுப்படுத்துவது வெறுமனே நிர்வாக ரீதியான விடயமாக அல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதிச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இக்குழு சுட்டிக்காட்டியது.
அத்துடன், நீதிமன்றம், இலங்கை பொலிஸ், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.