மீண்டும் மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமையா..! சபையில் அரசாங்கத்திற்கு பகிரங்க வலியுறுத்தல்
இலங்கையில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் நிலவியது போன்ற மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை மீண்டும் ஒருபோதும் ஏற்படக்கூடாது எனவும், இது தொடர்பில் அரசு முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20.02.2026) நடைபெற்ற 'வலுசக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள்' தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மின் கட்டண அதிகரிப்பிற்கான பரிந்துரை
அவர் மேலும் தெரிவிக்கையில், நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை 13.8 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறான மேலதிக சுமை அடிமட்ட மக்கள் மீதே சுமத்தப்படும். இதனால் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
கடந்த காலப் பொருளாதார நெருக்கடிகளால் நாடு பாரிய பின்னடைவைச் சந்தித்தது. அத்தகையதொரு இருண்ட காலம் மீண்டும் உருவாக அரசு இடமளிக்கக்கூடாது. தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையால் மின்சார சபைக்கு 5 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் இவ்வாறான தவறுகளால் ஏற்படும் நட்டத்தை ஏழை மக்கள் தலையில் சுமத்துவது நியாயமற்றது.

வெளிப்படையான பொறிமுறை
எனவே, நிலக்கரி இறக்குமதியின் போது முறையான மற்றும் வெளிப்படையான பொறிமுறையைப் பின்பற்றுவது அவசியமாகும். தற்போது பெய்து வரும் மழையினால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, அறுவடை செய்த நெல்லை உலர்த்த முடியாமல் விற்பனை செய்ய முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். எனவே, விவசாயிகளின் நலன் கருதி பிரதேச ரீதியாக நெல் உலர்த்தும் இயந்திரங்களை நிறுவுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலக நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சி : உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிரடியாக ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி
அத்துடன், தமது சொத்துக்களை அடகு வைத்தும் விற்றும் விவசாயம் செய்யும் இவர்களுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதோடு, நெல் உலர்த்தும் இயந்திரங்களுக்கான மின்சாரத்தை மானிய அடிப்படையில் வழங்கவும் அரசாங்கம் முன்வர வேண்டும் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |