கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் உள்வாங்குமாறு கோரிக்கை
கிண்ணியா தள வைத்தியசாலை மத்திய அரசுக்கு உள்ளீர்க்கப்படுமாயின் இந்த மக்களுக்குச் சிறந்த சேவையினை வழங்க முடியும் எனவும் கிண்ணியா சூரா சபை தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் பலவற்றை மத்திய அரசாங்கம் தமது பொறுப்பில் எடுத்து அதனை அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றது.
இந்நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை பல வருடங்களாக இப் பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்டு மக்கள் போராட்டமாகவும் இதனை முன் வைத்தனர்.
இருந்தபோதிலும் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை எனவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் அதிகமான வெளி நோயாளர்களைக் கொண்ட ஒரு வைத்தியசாலை இதுவாகும். அதிகமான கர்ப்பிணி தாய்மார்கள் இருக்கின்ற ஒரு பிரதேசம் இந்த கிண்ணியா பிரதேசமாகும்.
இந்த வைத்தியசாலையில் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்கள் மாத்திரமல்லாது திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசம் மற்றும் மூதூர் பிரதேசம் தம்பலகாம் பிரதேசத்தின் ஒரு பகுதியிலிருந்தும் மக்கள் தங்களது சுகாதார தேவைக்காக இந்த வைத்தியசாலையை நாடி இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
2017 ஆம் ஆண்டு தள வைத்தியசாலை தரம் ஏ என்னும் தரத்திற்கு இந்த வைத்தியசாலை தரம் உயர்த்தப்பட்ட போதிலும் இதற்கான பௌதிக வளங்கள் என்பன தொடர்ச்சியாகப் பற்றாக்குறையாகவே இருந்து வருகின்றது.
எனவே கடந்த காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மக்களுடைய தேவைகளைக்
கவனத்தில் கொண்டு கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தில்
உள்ளீர்க்குமாறு கிண்ணியா சூரா சபை சுகாதார அமைச்சரிடமும், சுகாதார
அமைச்சிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.