கிளிநொச்சி மேய்ச்சல் தரை விவகாரம்: கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் கருத்து!
கிளிநொச்சி - கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளை அமைத்துத் தருவதற்கு இதுவரை எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கமோ அல்லது அரச உயர் அதிகாரிகளோ எடுக்கவில்லை என்று கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம் கால்நடை வளர்ப்பு என்பன மக்களின் பிரதான தொழிலாகக் காணப்படுகின்றபோதும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் இன்மையால் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதுடன், கால்நடைகளைப் பராமரிப்பதிலும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
கஷ்டங்களை எதிர் கொள்ளும் நிலை
நேற்றைய தினம் (17.04.2023) இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாவட்ட கால் நடைவளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம், பல்வேறு தேவைகளுக்காகக் காணிகளை ஒதுக்குகின்ற போதும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளை அமைத்துத் தருவதற்கு மத்திய அரசு மாகாண அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
மாவட்டத்தின் கரைச்சி கண்டாளை பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கால்நடைகள் பயிர் செய்கை காலங்களில் பராமரிப்பதற்குரிய மேய்ச்சல் தரைகள் இன்மையால் கஷ்டங்களை எதிர் கொள்ளும் நிலை காணப்படுகின்றது.
போசாக்கு குறைபாடு காரணமாகவும் கால்நடைகள் நோய் எதிர்ப்புச் சக்தி இன்றி மிக வேகமாக நோய்வாய்ப்பட்டு, இறக்கின்ற நிலமையும் காணப்படுகிறது. அண்மையிலே ஏற்பட்ட குளிர்காலமாகக் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன.
கால்நடை வளம்
இதற்கான இழப்பீடுகள் கூட இதுவரை முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. இவ்வாறு கால்நடைகளைக் கால்நடை பண்ணையாளர்கள் அறுவடை முடிந்த பின்னர், வயல் வெளிகளில் விடும்போது விவசாயிகள் அறுவடை செய்த அடுத்த நிமிடமே வைக்கோல்க்கு தீ வைத்து எரித்து விடுகின்றனர்.
இவ்வாறான நிலையில், கால்நடைகளுக்குப் போசாக்கான உணவு இல்லாத நிலை காணப்படுகின்றது.
இந்த நிலமை தொடர்ந்து நீடிக்குமாக இருந்தால் கால்நடை வளம் அற்றுப் போகின்ற
ஒரு மாவட்டமாகக் கிளிநொச்சி மாவட்டம் எதிர்காலத்தில் அமையக்கூடும் என்றும்
மேற்படி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri
