கரடியனாறு தற்காலிக கோவிட் சிகிச்சை நிலைய ஏற்பாடுகள் பூர்த்தி
மட்டக்களப்பு - ஏறாவூர்பற்று, செங்கலடி, கரடியனாறு வைத்தியசாலையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோருக்கான தற்காலிக கோவிட் சிகிச்சை நிலைய ஏற்பாடுகள் இடம்பெற்றும் வரும் நிலையில், தற்போது வேலைகள் பூர்த்தியாகி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
கடந்த 15ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
நாட்டில் பரவி வரும் கோவிட் தொற்று நிலைமையின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்கட்டமாக ஏறாவூர் பற்று, கரடியனாறு பிரதேசத்தில் தற்காலிக வைத்திய விடுதிகள் மற்றும் அறுபது கட்டில்கள் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலை பணிகள் இடம்பெற்று வருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்சவின் சிந்தனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இவ்வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் மேற்பார்வையில் இடம்பெறும் வேலைத்திட்டத்தை இன்றும் சென்று இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.







