கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் சந்தேகம்! விரையும் முக்கிய அதிகாரிகள் - பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைப்பு
புதிய இணைப்பு
மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் உடல் நீதவானின் கள விசாரணையை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதற்கமைய, கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் பொலிஸ் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், சற்றுமுன்னர் பொலிஸ் மோப்ப நாய்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
மரணத்திற்கான காரணம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் மர்மமான காரணங்களா என்பது குறித்து பிரேத பரிசோதனைகளின் பின்னரே உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டிய , பெத்ரிஸ் மாவத்தையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கபில சந்திரசேனவின் உடலை பொலிஸார் இன்று காலை (08) கண்டுபிடித்தனர்.
மரணத்தில் சந்தேகம்
குறித்த வீட்டின் ஓர் அறையில் கபில சந்திரசேனவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரியும் இன்று காலை சம்பவ இடத்திற்கு வருதை தந்து ஆராய்ந்த நிலையில், அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கோட்டை நீதவான் பசன் அமரசேனவும் சம்பவ இடத்திற்கு பரிசோதனை நடத்துவதற்காக வருகை தந்துள்ளார்.
இச்சம்பவம் ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம் எனக்கருதி, மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கொள்ளுப்பிட்டிய பொலிஸ், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சம்பவம் தொடர்பாக தகவல்களை சமர்ப்பித்தபோது தெரிவித்துள்ளன.
கொழும்பு மாவட்ட பொறுப்பதிகாரி, பொலிஸ் பிரதிப்பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) நிஷாந்த சொய்சாவின் அறிவுறுத்தல்களின் பேரில், மேற்கு மாகாணப் பொறுப்பு சிரேஷ்ட டி.ஐ.ஜி. சஜீவ மெடவட்டத்தின் தலைமையில் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கபில சந்திரசேனவின் மரணம் குறித்து கொள்ளுப்பிட்டிய பொலிஸார் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளதுடன், முக்கிய அதிகாரிகள், பொலி்ஸ் அதிகாரிகள் என பலர் கபில சந்திரசேனவின் கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
எயார்பஸ் விமானங்கள் கொள்வனவு மோசடி
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக, அவரது உறவினர்கள் எனக்கூறி போலி பிணையாளர்கள் இருவர் நீதிமன்றில் முன்னிலையானமை தெரியவந்தமையை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டின் பேரில் அவரை மீண்டும் கைது செய்யுமாறு நீதிமன்றம் நேற்று (7) உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கபில சந்திரசேனவின் சடலம் கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.
you may like this
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam