கந்தளாய் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் அபாயம்!
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, திருகோணமலை- கந்தளாய் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதால் வான் கதவுகளைத் திறக்க வேண்டிய நிலை உருவாகி இருப்பதாக பிராந்திய நீர்ப்பாசனப் பிரிவுக்குப் பொறுப்பான பொறியியலாளர் எஸ்.ஏ.சி.எஸ். சுரவீர தெரிவித்துள்ளார்.
நீர் மட்ட நிலவரம் 92,520 ஏக்கர் அடி (82%) ஆகும். குளத்தின் அதிகபட்ச நீர் வழங்கல் நிலை (FSL) 114,000.00 ஏக்கர் அடியாகும்.
பிராந்தியத்தில் தொடரும் அதிக மழை வீழ்ச்சி, மின்னேரியாவில் உள்ள கந்தளாய் யோதா கால்வாய் வழியாக நீரின் வரத்து அதிகரிப்பு காரணமாக கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது.
ஏற்பாடுகள்
எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையையும், 2025/26 பெரும் போக பருவத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நெல் சாகுபடியைப் பாதுகாக்கும் நிலைமையையும் கருத்தில் கொண்டு, நீர்த்தேக்கத்தின் மதகுகளைத் திறந்து அதிகப்படியான நீரை வெளியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் முக்கிய நோக்கம் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதைக் குறைப்பதாகும். இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தின் மதகுகள் திறக்கப்படும்போது அதிக நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
பொறியியலாளர் எஸ்.ஏ.சி.எஸ். சுரவீர, தேவையான முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், அத்துடன் கிண்ணியா, கந்தளாய் மற்றும் தம்பலாகமம் ஆகிய பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்குக் கடிதம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.