மலேசியாவில் ஆடம்பர மாளிக்கைக்குள் சிக்கிய இலங்கையில் தேடப்படும் குற்றக்கும்பல் - தப்பியோடிய கஞ்சிபானை
மலேசியாவில் கைது செய்யப்பட்ட, பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர்களான ரத்மலானை சைமா உள்ளிட்ட மூன்று பாதாள உலக குற்றவாளிகள் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
மலேசிய பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் ஆகியவற்றின் உதவியுடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல தலைமையிலான பொலிஸ் குழுவினராலே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்புப் பாதுகாப்புடன் அழைத்து வரப்படும் இந்த 3 குற்றவாளிகளும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கைது செய்யும் நடவடிக்கை
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல தலைமையிலான குழுவினர் கஞ்சிபானி இம்ரானை கைது செய்யும் நடவடிக்கையை பாதியிலேயே நிறுத்திவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.

இருந்த போதிலும், மலேசிய பொலிஸாரும் இன்டர்போல் அமைப்பும் இக்குற்றவாளியைக் கைது செய்வதற்கான தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் தற்போது மலேசியாவிலிருந்து தப்பியோட முடியாதவாறு முற்றுகையிடப்பட்டுள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் கைது செய்யப்படுவார் என அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன. விசாரணை அதிகாரிகளின் தகவலுக்கமைய, மலேசியாவில் கைது செய்யப்பட்ட ரத்மலானை சைமா, கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் பெரும்பாலான பாதாள உலக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றுள்ளார்.
செல்வந்தராகக் கூறப்படும் ரத்மலானை சைமாவுக்கு தாய்லாந்தில் ஐந்து மாடி ஆடம்பர ஹோட்டல் உட்பட பல வணிக நிறுவனங்கள் உள்ளமையும் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் வலையமைப்பு
இந்த சொத்துக்கள் அனைத்தும் சைமாவினால் கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கியதன் மூலமே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதென தெரியவந்துள்ளது.

சைமா கைது செய்யப்பட்டுள்ளமை கஞ்சிபானி இம்ரானுக்கு பெரிய அடியாகக் கருதப்படுவதோடு, மலேசியாவில் அவரது நடவடிக்கைகள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் பதுங்கியிருக்கும் கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்வதற்காக ரோஹன் ஒலுகல மற்றும் சட்டப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி வசந்த பிட்டியகும்புற ஆகிய இருவரும் சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவுக்குச் சென்றிருந்தனர்.
மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அந்நாட்டு பொலிஸார் மற்றும் இன்டர்போல் அமைப்பினது உதவியைப் பெற்ற உதவி ரோஹன் ஒலுகல, கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்வதற்கான பல நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
கஞ்சிபானி கைது செய்யப்படுவதற்கு முன்னர், ரத்மலானை சைமாவைக் பிடிக்க விசாரணை அதிகாரிகள் வெற்றிகரமாகச் செயற்பட்டனர்.
சைமா சிக்கிய செய்தி கசிந்தவுடன், கஞ்சிபானி இம்ரான் தான் பதுங்கியிருந்த இடங்களை மாற்றிக்கொண்டு வேறு இடத்திற்குச் சென்று இரகசியமாகத் தலைமறைவாகியுள்ளார்.