பிள்ளைகள் குடிக்க பால்மா இல்லை: அரசாங்கத்திற்கு எதிராக கல்முனை மக்கள் போராட்டம் (Photos)
அரசாங்கத்திற்கு எதிராக அம்பாறை- கல்முனை நகரத்தில் தீப்பந்தங்களை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது இன்று தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் தலைமையில் கல்முனை பிரதான வீதி ஐக்கிய சதுக்க முன்றலில் இடம்பெற்றுள்ளது.
“74வருட சாபக்கேட்டை இல்லாதொழிப்போம் - மக்களை துன்புறுத்தும் அரசாங்கத்தை விரட்டியடிப்போம்" எனும் தொனிப்பொருளில் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ, தேசிய மக்கள் சக்தி பிரதேச அமைப்பாளர்கள், தேசிய மக்கள் சக்தி ஆதரவு இளைஞர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்டோர் “கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு” , “வாகனம் ஓட பெட்ரோல் இல்லை”, “நாட்டில் மின்சாரம் இல்லை”. “பிள்ளைகள் குடிக்க பால்மா இல்லை” ,“குழந்தைகள் படிக்க கரண்ட் இல்லை” ,“பரீட்சை இல்லை” , “கொள்ளையிட்ட பணம் எங்க” ,“அடுப்பு மூட்ட எரிவாயு இல்லை” ,“நாட்டில் எதுவுமில்லை” ,“பசில் வேண்டாம், மகிந்த வேண்டாம், கோட்டாவே வெளியேறு”, “நாட்டில் எதுவுமில்லை மக்களுக்கு பசி, பசளை தா, பெட்ரோல் தா, பசிலே வெளியேறு, அரசே வீட்ட போ, கோ கோம் கோட்டா” போன்ற கோசங்களையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.









