கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் வெறிச்சோடிய போராட்டக்களம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 105 நாட்களுக்கு மேலாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் தற்போது மக்கள் பங்கேற்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
இந்நிலையில் இன்று (8) போராட்ட களம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் திங்கட்கிழமை(25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
தொடர் போராட்டம்
அதன் தொடர்ச்சியாக 105 நாட்களுக்கு மேலாக பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டமானது தொடரப்பட்டது.
எனினும் கடந்த தினங்களை விட குறைந்தளவான மக்களே தற்போது குறித்த போராட்டத்தில் பங்கேற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் குறித்து ஏற்பாட்டாளர்களிடம் வினவியபோது மக்கள் தற்போது கதிர்காம பாத யாத்திரை மேற்கொண்டுள்ளமையினால் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என குறிப்பிட்டதுடன் மக்கள் எதிர்காலத்தில் இணைந்து கொள்வார்கள் என பதில் வழங்கியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கணடித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் என மக்கள் வீதிக்கிரங்கி போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |