கொழும்பில் பாடசாலை மாணவனை மிரட்டி போதைப்பொருள் கடத்திய கும்பல்..! விசாரணையில் சிக்கிய பெண்கள்
கொழும்பில் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவரொருவரை மிரட்டி போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திக் கொண்ட கும்பலொன்று தொடர்பான விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கொலை அச்சுறுத்தல் விடுத்து 17 வயதுடைய பாடசாலை மாணவரொருவரைப் பயன்படுத்தி, மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான தகவல் கடலோரப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களினால் கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பில் சிக்கிய மாணவன்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு வடக்கு பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பொலிஸ் போர் மோட்டார் சைக்கிள் பிரிவு குழுவினர், புதுச் செட்டித் தெரு பகுதியில் அண்மையில் விசேட ரோந்து நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு மாணவன் தொடர்பில் அவர்களின் கவனம் திரும்பியுள்ளது. இதனையடுத்து, குறித்த மாணவனை விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த மாணவர் வைத்திருந்த மெழுகுப் பையில் அதிக அளவிலான பண நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீது வலுவான சந்தேகம் எழுந்ததால் பொலிஸ் நிலையத்திற்குக் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் நடத்தப்பட்ட உடல் சோதனையின்போது, அவர் அணிந்திருந்த உள்ளாடைக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிரட்டிப் போதைப்பொருள் கடத்தல்
கைது செய்யப்பட்ட மாணவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இதுவரை வெளியிடப்படாத பல முக்கிய தகவல்கள் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.

சந்தேகத்திற்குரிய மாணவரின் பெற்றோர் பேலியகொட மீன் சந்தையில் ஒரு உணவகத்தை நடத்தி வருகின்றனர், மேலும் மாணவரும் அவரது தங்கையும் மட்டுமே வீட்டில் வசித்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு, பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இந்த மாணவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அணுகி, அவரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
பணம் கொடுத்து நபர்
பின்னர் மாணவரின் கைபேசி எண்ணைப் பெற்ற அந்த நபர், அவரிடம் ஒரு பொதியைக் கொடுத்து, அதை வீட்டில் மறைத்து வைக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். தொலைபேசி அழைப்புகளில் அறிவுறுத்தப்பட்டபடி, மட்டக்குளி, கிராண்ட்பாஸ் மற்றும் பேலியகொட போன்ற பகுதிகளுக்கு அவ்வாறான பொதிகளை எடுத்துச் செல்லுமாறு மாணவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மரண பயத்தின் காரணமாக அந்தப் பொதிகளைத் தான் திறந்து பார்க்கவே இல்லை என்று அந்த மாணவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கடத்தல்காரர்கள் இந்த செயற்பாடுகளுக்காக மாணவருக்கு அவ்வப்போது பல்வேறு தொகைகளைக் கொடுத்துள்ளனர்.
கொத்து ரொட்டி போன்ற உணவுகளை வாங்கிச் சாப்பிட அந்தப் பணத்தைப் பயன்படுத்தியதாக அந்த மாணவர் கூறியுள்ளார்.
விசாரணையில் சிக்கிய 2 பெண்கள்
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பணப்பை தொடர்பில் விசாரணை செய்தபோது, இரண்டு பெண்கள் அந்தப் பணப் பையை மாணவரிடம் கொடுத்து, அதனுள் இருக்கும் போதைப்பொருள் பொட்டலத்தைத் தன் உடலில் மறைத்து வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் இலக்காகியுள்ள குறித்த மாணவர் கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு மாணவர் என்பதுடன், அவர் க.பொ.த. உயர்த் தரப் பரீட்சை எழுதி, அதில் ஒரு 'ஏ' (A) தேர்ச்சியும், இரண்டு 'பி' (B) தேர்ச்சிகளும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய அந்த மாணவர், கடலோரப் பொலிஸ் நிலையத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியான விவேகானந்த மாவத்தையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் கடலோர பொலிஸ் நிலையப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam