தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வில் அநுர அரசாங்கம் அடிபணியாது: கலைச்செல்வி எம். பி தெரிவிப்பு
தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கடந்த அரசாங்கங்களைப் போன்று எமது அரசாங்கம் கம்பனிகளுக்கு அடிபணியாது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இன்று(08.02.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு ஒப்பந்தம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்தேசியக் கம்பனிகளுடன் 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஒப்பந்தமே இந்தக் கூட்டு ஒப்பந்தமாகும்.
கூட்டு ஒப்பந்தம் மட்டுமே மலையக மக்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அல்லது அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் அவசியம் என்று கூறுவதைக் கடந்தும் நாம் சிந்திக்க வேண்டும்.

மலையக மக்கள் என்றால் யார்? தோட்டங்களில் வேலை செய்கின்ற, கொழுந்து பறிக்கும், காண் வெட்டும் மக்கள் யார்? இந்த நாட்டின் இரண்டு கோடி இருபது லட்சம் மக்களில் ஒரு பகுதியினர் அல்லவா அவர்கள்? அவர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அல்லது பிற தேவைகளை நிறைவேற்றவும் ஏதாவது ஒரு ஒப்பந்தத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்குத் கடந்தகால அரசாங்கங்களே நாட்டை இட்டுச் சென்றன.
ஆனால் இன்று சம்பளத்தை உயர்த்துவதற்கு எங்களுக்கு கூட்டு ஒப்பந்தம் தேவையில்லை. அரசாங்கம் தீர்மானித்த 400 ரூபாய் சம்பள உயர்வை வழங்கியுள்ளது. இருப்பினும், இந்த தோட்டங்கள் பல்தேசியக் கம்பனிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர்களுடன் சில ஒப்பந்தங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்குத் தற்போதைய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கம் ஏதேனும் ஒப்பந்தத்தில் ஈடுபட்டால் அது மக்களின் சார்பாகவே இருக்கும் கம்பனிகளின் சார்பாக இருக்காது. இன்றும் சில கம்பனிகள் தொழிலாளர்களை பாதிக்கும் தீர்மானங்களை எடுத்து வருகின்றன.
எதிர்காலத்தில் இதுபற்றி நாம் பேசுவோம். தற்போது கம்பனிகளுடன் கையொப்பமிட்டிருப்பது பெருந்தோட்டத் துறை அமைச்சின் செயலாளரும் இலங்கையின் தொழில் அமைச்சின் செயலாளரும் ஆவர்.

இது மலையக மக்களுக்கு 400 ரூபாய் சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக மட்டுமே அமைகிறது. தேயிலை கொழுந்தின் அளவை அதிகரித்தல், வேலைப்பளுவை உயர்த்தல், வேலை நேரத்தை கூட்டுதல் போன்ற எதுவும் இதில் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் சில கம்பனிகள் தேயிலை கிலோ அளவை அதிகரித்ததாகவும், வேலைப்பளுவை உயர்த்தியதாகவும், வேலை நேரத்தை கூட்டியதாகவும் பல இடங்களிலிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சில தொழிற்சங்கங்களும் இதற்கு ஒத்துழைத்து அச்சத்தை உருவாக்குகின்றன.
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு
அரசாங்கம் கம்பனிகளுடன் செய்திருப்பது கூட்டு ஒப்பந்தமல்ல, அது தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 ரூபாய் சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான நடவடிக்கை மட்டுமே.
சமர்ப்பிக்கப்படவுள்ளது தேசிய மின்சக்தி கொள்கை மற்றும் தேசிய மின் கட்டணக் கொள்கை தொடர்பான அமைச்சரவை பத்திரம்
முன்னர் பெருந்தோட்டத் துறையைச் சார்ந்த அமைச்சர்களும் கம்பனிகளுமே ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டதால் அத்தகைய நிலைகள் ஏற்பட்டன.
ஆனால் இன்று அவ்வாறு இல்லை. எதிர்காலத்தில் கம்பனிகள் மக்கள்மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், மக்களை இணைத்துக்கொண்டு கம்பனிகளுக்கு எதிராக தேவையான தீர்மானங்களை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.