நிபந்தனையின் அடிப்படையிலேயே சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்போம் - அநுரகுமார
சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்குமாறு எமக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை, அவ்வாறு அழைப்பு விடுத்தால் நிபந்தனையின் அடிப்படையிலேயே பங்கேற்போம் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
சர்வகட்சி மாநாட்டுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் அரசின் நிதி நிலவரம் தொடர்பான உண்மையான தரவுகள் எமக்கு வழங்கப்பட வேண்டும்.
அப்போது தான் சிறந்த கலந்துரையாடலை முன்னெடுக்க முடியும். அவ்வாறு வழங்கினால்தான் நாம் மாநாட்டில் பங்கேற்போம்.
எமக்கு இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. அவ்வாறு கிடைத்தால் அது பற்றி பரிசீலிக்கப்படும். இருந்தாலும்
ஆவணங்கள் முன்கூட்டியே வழங்கப்பட்டால்தான் பேச்சுக்குச் செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.