மீண்டும் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் நிலாந்தன்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையம் ஆகியவற்றின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தனை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நடத்தப்படும் விசாரணை ஒன்றிற்காக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி காலை 12 மணிக்கு கொழும்பு-05 கிருளப்பனை நாரேன்பிட்டியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைப்பு
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் உள்ள ஊடகவியலாளர் நிலாந்தன் அவர்களின் வீட்டிற்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் மேற்படி அழைப்பு கடிதத்தை இன்று (03) பிற்பகல் அவரது குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளனர்.
இதன்போது அவருடைய மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர், அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட பல விபரங்களை கேட்டு பதிவு செய்து சென்றுள்ளனர்.
ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் செய்ய முயற்சிகளை மேற்கொள்வதாக கூறியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தயாமோகனுடன் தொடர்பில் இருந்ததாக கூறி பல தடவைகள் இலங்கை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.
மனித உரிமைகள் அமைப்புகளிடம் கோரிக்கை
இந்நிலையில் மீண்டும் ஊடகவியலாளர் நிலாந்தன் மீது இலங்கை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவது அவரையும் அவரது குடும்பத்தினரையும் தொடர்ச்சியாக அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது.
இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
பயங்கரவாத தடைச் சட்டம் இந்த நாட்டில் இருந்து நீக்கப்படும் என்று கூறியுள்ள நிலையில் அது நீங்கப்பட்டாளும் அந்த பிரிவினரால் மேற்கொள்ளப்படும் இது போன்ற விசாரணைகள் வேறு ஒரு பெயரில் தொடரத்தான் போகிறது என்பது ஊடகவியலாளர்கள் மீதான இது போன்ற விசாரணைகள் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் இது போன்ற விசாரணைகள் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யும் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்குமாறு மனித உரிமைகள் அமைப்புகளிடம் ஊடகவியலாளர் நிலாந்தன் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.