உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ள ஜோசப் ஸ்டாலின்
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளைப் பயன்படுத்தி போராட்டங்களைத் தடுக்க பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் பொது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அறிவிக்கக் கோரி இலங்கை ஆசிரியர் சேவை சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மனுதாரர், தமது மனுவில், காவல்துறை அதிபர் சந்தன விக்ரமரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன, தலங்கம காவல்துறை பொறுப்பதிகாரி, மிரிஹன காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி, சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
மனுவின்படி, ஜோசப் ஸ்டாலின் ஆகிய தாம், தொழில் ரீதியாக ஒரு ஆசிரியர் மற்றும் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் சேவையில் பணியாற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக யோசனைக்கு எதிராக தாம் உட்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜூலை 8 ஆம் திகதி பத்தரமுல்ல சந்தியில் கூடியிருந்தனர். முற்பகல் 11 மணியளவில், ஒரு குழுவினர் எதிர்ப்பாளர்களைக் கலைக்க அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்தினர் மற்றும் சுமார் 30 பேருடன் மனுதாரரான தம்மையும் கைது செய்தனர்.
கொழும்பு நீதிவான் நீதிமன்றால் பிணையில் அனுமதிக்கப்பட்ட தாம் உட்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் சுகாதார அதிகாரிகள் அல்லது என்டிஜென் சோதனை அல்லது பி.சி.ஆர் சோதனை எதுவும் இல்லாமல் முல்லைத்தீவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக மனுதாரர் தெரிவித்தார்.
இந்தநிலையில், அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மனுதாரரின் அடிப்படை உரிமைகள், பிரதிவாதிகளால் மீறப்பட்டதாக உயர்நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார்.