போராட்டத்தில் குதித்த யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
தமக்கான ஊதிய உயர்வு மற்றும் கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்று தற்போது நிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்துடன் இணைந்து ஒரு நாள் அடையாள போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து முன்னெடுக்கப்பட்ட குறித்த எதிர்ப்புத் தெரிவிக்கும் அடையாளப் போராட்டம், பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இன்றையதினம் (30.09.2025) முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள்
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பல்கலையின் ஆசிரியர் சங்க தலைவர் விக்னேஸ்வரன் - இன்றைய அரசின் கல்வி அமைச்சர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களுடன் எமது பிரச்சினைகள் குறித்து பலசுற்றுப் பேச்சுக்களை நடத்தி, தீர்வை வழங்க அவர்கள் இணங்கிய நிலையில், தீர்வுகளை நடைமுறைபடுத்துவதில் காலதாமதம் இருந்து வருகிறது.
இந்நிலையில், அதற்கு எமது எதிர்ப்பை வெளிக்கொணரும் வகையிலும் தீர்வை விரைவுபடுத்தக் கோரியுமே இந்த போராட்டத்தை நாம் முன்னெடுக்கின்றோம்.
இந்த அரசு தற்போது கொண்டுவந்துள்ள சம்பள சீரமைப்பில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை இருக்கின்றது.
அதேபோன்று கோவிட் உள்ளிட்ட பல அனர்த்தங்களால் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாணவர் அனுமதிப்பும் அதிகரித்துள்ளதால் மாணவர்களை உரிய ஆராய்ச்சி முறையிலான கற்பிதங்களை செய்வதில் பல நெருக்கடிகள் இருக்கின்றன.
விரிவுரையாளர்கள் பலர் வெளிநாடுகளில்
மேலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிள்ளைகளுக்கு தரம் மிக்க பாடடாலைகளில் முதலாம் தரத்தில் இணைப்பதற்கான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. அதை இந்த அரசு நிறுத்தியுள்ளது.
விரிவுரையாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமையால் அவர்களது வெற்றிடங்களை நிவர்தி செய்வதற்கான நடவடிக்கையை இன்றைய அரசு எடுக்காதுள்ளதால் விரிவுரையாளர்கள் கடும் சுமைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் மாணவர்கள் கூடுதலான கற்றலை மேற்கொள்ள குறிப்பாக ஆராய்ச்சிகளை முன்னெடுக்க முடியாதிருக்கின்றது.
இவ்வாறான பல பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டு வரும் நிலையில் அரசுடன் போச்சுக்களை நடத்தி தீர்வை எட்டியிருந்தோம். ஆனால் அந்த தீர்வை நடைமுறைப்படுத்த அரசு பின்னடிக்கின்ற நிலை காணப்படுகின்ற்து.
இந்நிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வை விரைவுபடுத்தும் நோக்கிலேயே இந்த ஒரு நாள் அடையாள போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே நாட்டின் முதுகெலும்பான பல்கலைக்கழக கட்டமைப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







