யாழ். படுகொலை சந்தேகநபர் மாட்டினார்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் படுகொலைச் சம்பவங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய 'கனோஜி' என்ற வாள்வெட்டுக்குழு சந்தேக நபர் 2019ஆம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கும், மானிப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கும் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுதுமலை பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கொக்குவிலை சேர்ந்தவர் எனவும், தனுறொக் குறுப் என்ற வாள்வெட்டு குழுவைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.
மேலும், உப்புமடம் - கோண்டாவில் பகுதியில் காட்வெயார்கடை உரிமையாளரைத் தலையில் அடித்துப் படுகொலை செய்த வழக்கில் பிரதான சந்தேக நபரான இவருக்கு யாழ்.நீதிமன்றத்தில் இரண்டு பிடியாணைகள் உள்ளன எனவும், வினோதன் வீடு, அகிலசுமன் வீடு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்திய பிரதான சுத்திரதாரி இவர் எனவும், ராஐா கிறீம் கவுஸில் மோட்டார் சைக்கிளைப் பறித்துச் சென்றவரும் இவரே எனவும் கூறப்படுகின்றது.
மேலும், குறித்த சந்தேக நபரின் தாய் வெளிநாட்டில் இருக்கின்றார் எனவும், அவரின் உதவியுடன் ஓரிரு மாதத்தில் இலங்கையை விட்டுத் தப்பிக்க இருந்த நிலையில், குறித்த நபர் மாறுவேடத்தில் அடையாளம் காண முடியாதவாறு உருமாற்றம் செய்து தலைமறைவாகியிருந்த நிலையில் மானிப்பாய் - சுதுமலையில் வைத்து இவருடன் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.