தொடரும் சிங்கள பௌத்த பேரினவாதம்: சுகாஷ் பகிரங்கம்
எமது உணர்வுகளுக்கு மேலும் சுமையும் துன்பங்களும் ஏற்படுத்துகின்ற வகையில் இந்த சிங்கள பௌத்த பேரினவாதம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(02.07.2023) காங்கேசன்துறை திஸ்ஸ விகாரைக்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டவேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவில்லையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய தொடர் போராட்டத்திற்கு சாதகமான பதில் இன்றுவரை பொறுப்பு வாய்ந்த எவரிடம் இருந்தும் எமக்கு கிடைக்கவில்லை.
பௌத்தத்தை நாங்கள் நேசிக்கின்றோம்
எனவே நமக்கு வேறு மாற்றங்களோ வேறு உபாயங்களோ கிடையாது. எமது மக்களுடைய எதிர்கால இருப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், சட்டவிரோத சிங்கள ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்காகவும் மீண்டும் தையட்டியிலே எங்களது போராட்டத்தை தொடர வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்ற விடயம், சிங்கள மக்களையோ பௌத்த மதத்தையோ நாங்கள் வெறுக்கவில்லை.
பௌத்தத்தை நாங்கள் நேசிக்கின்றோம் சிங்கள மக்களை நாங்கள் விரும்புகின்றோம். அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்கின்றோம்.
நாங்கள் தாழ்மையாக கேட்பது, நாங்கள் எவ்வாறு உங்களை
மதிக்கின்றோமோ, உங்களது உணர்வுகளை புண்படுத்தாது செயற்படுகின்றோமோ அதேபோல்
நீங்களும் நடந்து கொள்ளுங்கள்.என கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
தையிட்டி விகாரைக்கு அண்மையில் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
தையிட்டியில் மீண்டும் போராட்டம் முன்னெடுப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்த நிலையிலேயே தற்போது போராட்டம் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளைய(03.07.2023) போயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த போராட்டமானது நாளையதினமும் தொடரவுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
முதலாம் இணைப்பு
தையிட்டி விகாரைக்கு அண்மையில் வழமை போன்று போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஒன்று கூடுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தப் போராட்டமானது இன்று (02.07.2023) மற்றும் நாளை (03.07.2023) ஆகிய இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளது.
அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
வழமையாக போராட்டம்
அந்த சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராகவும் தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம் (02.07.2023) ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு அனைவரையும் தையிட்டி விகாரைக்கு அண்மையில் வழமையாகப் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஒன்று கூடுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




