யாழில் திடீரென பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து பெண்ணொருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடொன்றினை மேற்கொள்ள சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்கு தெரு பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த மல்லாவி துணுக்காய் பகுதியை சேர்ந்த ஜே. தேவரஞ்சன் (வயது 31) எனும் இளைஞன் நேற்றுமுன் தினம் இரவு தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார்,இளைஞன் தங்கியிருந்த வீட்டின் மற்றுமொரு அறையில் தங்கியிருந்த வயோதிப பெண்ணை வாக்குமூலம் வழங்க வருமாறு நேற்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்திருந்தனர்
அதன் அடிப்படையில் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிலையம் சென்றிருந்த பெண் , திடீர் சுகவீனமுற்று பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை அறிக்கை
அதனையடுத்து நோயாளர் காவு வண்டி மூலம் பெண் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது , வயோதிப பெண் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்,திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேமகுமார் மரண விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
இதன்போது , வயோதிப பெண்ணின் உறவினர்கள் கொழும்பில் வசித்து வருவதாகவும்,யாழ்ப்பாணத்தில் வர தனியாகவே வசித்து வந்ததாகவும்,மலர் என அழைக்கப்படும் அவரது வயது 75 என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை உயிர்மாய்த்த இளைஞன் , கடந்த சில தினங்களாக மனவிரக்தியில் காணப்பட்டதாகவும் , நேற்றைய தினம் இரவு அவருக்கு தேநீர் ஊற்றி கொடுத்து விட்டு,சென்ற பின்னர் இளைஞன் இவ்வாறான தவறான முடிவினையெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |