யாழ். மாநகரசபையின் கழிவகற்றும் திட்டம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
யாழ். மாநகரசபையின் கழிவகற்றும் திட்டத்துக்காக ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 14.3 மில்லியன் ரூபா உரிய காலத்தில் பயன்படுத்தப்படவில்லை எனும் காரணத்தை சுட்டிக்காட்டி, அதனை மீள வழங்குமாறு ஜப்பானிய தூதரகம் அண்மையில் மாநகரசபைக்கு அறிவித்திருந்தது.
இந்த நிதி வழங்கப்பட்டு மூன்று வருடங்களாகியும் உரிய முறையில் அது பயன்படுத்தப்படவில்லை என்பதே ஜப்பானிய தூதரகத்தின் குற்றச்சாட்டாகும்.
எனினும் இந்த நிதியை பயன்படுத்துவதற்கு இலங்கையின் நிதியமைச்சு தமக்கு அனுமதி வழங்கவில்லை எனும் காரணத்தை மாநகரசபை கூறியிருந்தது.
வங்கியில் வைப்பு செய்யப்பட்ட நிதிப் பணம்
அத்துடன் இந்த நிதி வங்கியில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை ஜப்பானிய தூதரகத்துக்கு திருப்பியளிக்க முடியும் என்றும் மாநகரசபையின் உறுப்பினரொருவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
வைப்பிலிடப்பட்டதன் பிரதிபலன்
இந்த நிலையில் புத்திசாலித்தனமாக அந்த நிதியானது அரசாங்க வங்கி ஒன்றின் நிலையான வைப்புத் தொகையாகச் சேமிக்கப்பட்டதால், வட்டியாக மாத்திரம் 2.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை கணக்கிடப்பட்டுள்ளது என்பது இப்போது தெரியவந்துள்ளது.
எனவே, வட்டித் தொகையை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது
என்பது தொடர்பில் விவாதிக்க இன்னும் மாநகரசபை கூடவில்லை என்று ஆங்கில
செய்தித்தாளொன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.