யாழில் கிராமசேவகர் அலுவலகம் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனம்: நடவடிக்கை எடுக்கப்படுமா...!
யாழில் உள்ள கிராம சேவகர் அலுவலகம் ஒன்று தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளதோடு இது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
குறித்த கிராமசேவகர் அலுவலகத்தின் அமைவிடம் மற்றும் அதன் அமைவிடச்செயற்பாடுகள் தொடர்பிலேயே இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
யாழ். பலாலி வீதியில் பருத்தித்துறை வீதி ஆரம்பமாகும் சிறாம்பியடிச் சந்தியில் உள்ள ஜே/79 கிராம சேவகர் அலுவலகம் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் சார்ந்து ஏனைய கிராம சேவகர் அலுவலகங்களிலும் செயற்பாட்டு மாற்றங்கள் ஏற்படும் வகையில் நடவடிக்கைகள் தேவை என சுட்டிக்காட்டப்படுவதும் நோக்கத்தக்கது.
கிராமசேவகர் அலுவலகம்
கிராமங்களை நிர்வகிக்கும் கிராமசேவகரின் அலுவலகமாகவே கிராமசேவகர் அலுவலகம் அமைந்திருக்கும். அதனுடன் இணைந்ததாக சனசமூக நிலையங்களும் அமையும் சந்தர்ப்பங்கள் பலவுண்டு. ஆயினும் அவை உரிய பயனடைவுகளை தருவதில்லை என ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
பெயரளவில் இருக்கும் சனசமூக நிலையங்கள் வாசிப்பிடமாக பயன்பாட்டில் இருப்பதில்லை. வாசிக்க தூண்டும் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருக்கும் போது சும்மா போய் வருபவர்கள் கூட இரண்டொரு எழுத்துக்களை வாசிக்க முனைந்து கொள்வார்கள். அதுவே நாளடைவில் அவர்களிடையே வாசிப்பின் மூலம் தேடியறிந்து கொள்ளும் ஆற்றலை பழக்கபடுத்தி கொண்டு விட உதவி விடும்.
கிராமசேவகர் அலுவலகத்துடன் இணைந்ததாக அவரால் நிர்வகிக்கப்படக்கூடியதாக வாசிகசாலைகள் அமையுமிடத்து அங்கு அலுவல்களுக்காக வருவோர் பத்திரிகைகளையும் படித்துச் செல்லும் அரிய வாய்ப்பு கிடைக்கும்.
இது அவர்களுக்கு பழக்கப்பட்ட விடயமாகிவிட வாசிப்பு பழக்கம் அருகிப்போகும் நிகழ்வாக மாறிப் போவதை தடுத்துவிடுவதில் இது பங்கெடுக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆனால் கிராமங்களில் வாசிகசாலைகள் தினசரி பத்திரிகைகளை படிக்கும் வசதிகளை ஏற்படுத்துவதில் முழுமைப்படுத்தப்பட்ட செயற்பாட்டை நீண்டகால அடிப்படையில் திட்டமிட்டுச் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு வாசிப்பார்வலர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
சிறாம்பியடிச் சந்தி
யாழ் நகருக்கு அருகிலுள்ள நாற்சந்திகளில் சிறாம்பியடிச் சந்தியும் ஒன்றாக அமைந்துள்ளது.
அரியாலைச் சந்தியில் இருந்து பலாலி வீதி வழியாக பயணப்படும் போது வரும் முதல் சந்தி சிறாம்பியடி சந்தியாகும்.
இச்சந்தியில் பலாலி வீதியுடன் பருத்தித்துறை வீதியும் சிறாம்பியடி குறுக்கு வீதியும் இணைந்து நாற்சந்தியை ஆக்குகின்றன.
சிறாம்பியடி வீதி ஸ்ரான்லி வீதியுடன் பலாலி வீதியை இணைத்து விடுகின்றது. அரியாலைச்சந்தியில் மின்சமிக்கை நிறுத்தத்தினை தவிர்த்து பயணிக்க விரும்பும் உந்துருளிகள் மற்றும் சிறிய வகை வாகனங்கள் இந்த குறுக்கு வீதியை அதிகம் பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை வீதியும் பலாலி வீதியும் அதிக மக்கள் பயன்பாடு கொண்ட வீதிகளாக அமைந்துள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சிறாம்பியடி கிராம சேவகர் அலுவலகம்
சிறாம்பியடி கிராம சேவகர் அலுவலகம் ஜே/79 என்ற பதிவிலக்கத்தினை கொண்டுள்ளது. அலுவலக கட்டிடம் சிறாம்பியடிச்சந்தியில் அமைந்துள்ளது.சிறாம்பியடி குறுக்கு வீதியை பார்க்கும் வண்ணம் கிராம சேவகர் அலுவலகம் மற்றும் கிராம சமுர்த்தி அலுவலகம் என்பவற்றின் வாசல் அமைந்துள்ளது.
இதனோடு இணைந்து இயங்கும் வகையில் பேணப்படும் வாசிகசாலையின் வாசல் பலாலி வீதியை பார்க்க வாசலை கொண்டுள்ளது.
அதிக வாகன போக்குவரத்தை கொண்டுள்ள நாற்சந்தியாக இருந்த போதும் வாசிகசாலையில் இருந்து பத்திரிகைகளை படிக்கும் போது இடையூறை உணரமுடியவில்லை என அங்கு பத்திரிகை படிக்க வந்திருந்த பலருடன் உரையாடிய போது அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கிராம நிர்வாகம் சார்ந்த விடயங்களுக்காக அலுவலகத்தில் சேவை பெற்றுக்கொள்ள வருவோரும் பத்திரிகை படித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
பலர் பத்திரிகைகளை படித்து விட்டு போவதனையும் அவர்களது செயற்பாடு கிராம சேவகர் அலுவலகத்தின் செயற்பாட்டுக்கு இடையூறாக அமையாதபடி இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
தினக்குரல், உதயன், வீரகேசரி, வலம்புரி, தினகரன் பத்திரிகைகள் படிப்பதற்காக அங்கு வைக்கப்பட்டிருப்பதோடு பத்திரிகைகளை படிப்பதற்கேற்ற அகச்சூழலையும் சிறாம்பியடி கிராம சேவகர் அலுவலகம் பேணியிருப்பது பாராட்டக்கூடியதாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏனைய இடங்களிலும் மாற்றம்
எல்லா கிராம சேவகர் அலுவலகமும் அதனோடிணைந்த வாசிகசாலை ஒன்றை பேண முயற்சிக்கப்படுமானால் அது வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கும் என சுட்டிக் காட்டப்படுவதும் நோக்கத்தக்கது.
நூலார்வலர்கள் நூல்களை படிப்பதற்காக நூலகங்களை நாடிச்செல்வதும் அல்லது சனசமூக நிலையங்களை நாடுவதும் வழமையானதாகும்.
இந்த வழமையில் சிறிய மாற்றமாக கிராமசேவகர் அலுவலகத்தோடு இணைந்ததாக அமையும் வாசிகசாலைகள் தினசரி மற்றும் வாராந்த பத்திரிகைகளை மட்டும் கொண்டதாக இருக்க வேண்டும்.
அப்போது பத்திரிகை வாசிப்பு மீதான ஆர்வம் அதிகமாக்கப்படுவதோடு பத்திரிகைச் செய்திகளூடாக நாட்டு நடப்புக்களை தேடியறியவும் வாய்ப்பேற்படுத்தப்படும்.
பத்திரிகைகளில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளை வாசிக்கக் கிடைப்பதன் மூலம் நாட்டு நடப்புக்களை தொடர்புபடுத்தி ஆராய்ந்து தெளிவான முடிவுகளை பெற்றுக்கொள்ளும் ஆளுமை மிக்க குடிமக்களாக கிராம மக்கள் இதனால் மாற்றம் பெற பொருத்தமான முயற்சியாக இது அமையும் என்பதும் இங்கே சுட்டிக் காட்டத்தக்கது.
எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் துறைசார்ந்த அதிகாரிகளும் கிராமசேவகர்களும் ஒன்றிணைந்து இது தொடர்பில் சிந்தித்துச்செயலாற்ற முற்பட்டால் ஆரோக்கியமான மாற்றங்களை ஈழத்தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தி விடலாம் என்பது திண்ணம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |