இலங்கை வந்தார் இத்தாலியின் வெளிவிவகார பிரதி அமைச்சர்..
இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று புதன்கிழமை மாலை இலங்கைக்கு வந்துள்ளார்.
இத்தாலியின் பிரதி அமைச்சர் மரியா திரிபோடி நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளார் என்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை - இத்தாலி
சுமார் ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் மிக உயர்ந்த மட்ட விஜயமாக இந்த விஜயம் கருதப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது, இலங்கை - இத்தாலி அரசியல் ஆலோசனைகளின் ஆரம்ப அமர்வுக்கு வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுடன் இணைந்து இத்தாலியின் பிரதி அமைச்சர் திரிபோடி தலைமை தாங்குவார்.
இந்த விஜயத்தின் போது அரசியல் ஆலோசனை பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடலுக்கான கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பை வழங்குகின்றது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடனும் கலந்துரையாடல்களை நடத்த இத்தாலியின் பிரதி அமைச்சர் மரியா திரிபோடி திட்டமிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1952 இல் நிறுவப்பட்டன என்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.



