கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டம் குறித்து தமிழரசு கட்சியின் நிலைப்பாடு.. சிறீதரன் வெளியிட்ட தகவல்
"நாம் நீலகாமம்" அறவழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்குக் காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொழும்பில் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
போராட்டத்திற்கு ஆதரவு
இது தொடர்பில் சிறீதரன் எம்.பி. மேலும் கூறியதாவது, “மலையகம் நீலகாமம் தோட்டத்தில் அட்டூழியக் கூலிப்படையின் மிக மோசமானத் தாக்குதலால் காயமடைந்தும், தமது சொத்துகளை இழந்த நிலையிலும் உள்ள எமது மலையக உறவுகளுக்கு நிச்சயம் நாம் துணை நிற்போம்.

அந்தவகையில் எதிர்வரும் மே 5ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் சாத்வீக வழிப் போராட்டத்துக்கு நாங்களும் தோளோடு தோள் கொடுத்து போராட்டம் வெற்றியளிக்க உதவுவோம்.
மலையக உறவுகளால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். நாம் நம்பிக்கையோடு எதிர்கால இருப்பு பற்றிய எண்ணங்களோடு கரங்களை இறுகப் பற்றிக்கொள்வோம்." என்றார்.