சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினநிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது - வெளியான அறிவிப்பு
இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் கையொப்பங்களுடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழரசுக் கட்சி
"ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
எமது நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாகப் பொறுப்புள்ள அரசும் சர்வதேசமும் விரைந்து செயற்பட வேண்டும்.

இந்த வருடம் வெவ்வேறு அமைப்புகள் தனித்தனியாக நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளன.
எமது கட்சியுடன் கலந்தாலோசித்து எந்த நிகழ்வும் ஒழுங்கு செய்யப்படவில்லை. நாங்கள் எதற்கும் அழைக்கப்படவில்லை. ஆகையால் எந்தவொரு அமைப்பும் நடத்தும் நிகழ்விலும் நாங்கள் கலந்துகொள்வதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட ரீதியில் கட்சி உறுப்பினர்கள் எதிலும் கலந்துகொள்வதில் எந்தத் தடையும் கிடையாது என்ற போதிலும், இந்த விடயத்தில் பிரிந்து நின்று போட்டியாகச் செயற்படுவதை இனியாவது தவிர்த்துக்கொள்ளுமாறு விநயமாகக் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.