கொடூரமான ஒடுக்கு முறைகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம் - வேழமாலிகிதன்
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை உடைத்து மே 18 நிகழ்வுகளை இல்லாது செய்வதனூடாக தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலை ஒன்றை இலங்கை அரசு புரியவில்லை என்பதைச் சர்வதேச ரீதியாக நிரூபிப்பதற்கு இலங்கை அரசு முயல்கின்றது என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற மே 18 நிகழ்வுகளை இந்த மண்ணிலே நிகழ்த்த முடியாத ஒரு துர்பாக்கிய நிலை இந்த மண்ணிலே ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது.
அதனுடைய ஆரம்ப நிகழ்வாக முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே இருந்த நினைவு தூபி அழிக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடத்திலே நடுவதற்காகக் கொண்டுவரப்பட்ட இருந்த நினைவுக்கல் காணாமலாக்கப்பட்டும் இருக்கின்றது என்பது மிகக் காத்திரமான செய்தியாக இருக்கின்றது.
இந்த நினைவுகளை அகற்றுவதன் மூலமும், நினைவு இடங்களை அழிப்பதன் மூலமும் தமிழர்களின் வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயமாக இருக்கும் மே 18 என்கின்ற அந்த வரலாற்று நினைவு நாளினை எமது தேசத்திலிருந்து இல்லாமல் செய்து விடுவதற்கான பெரும் முயற்சியினை சிங்களப் பேரினவாத அரசு எடுத்துள்ளது.
சிங்களப் பேரினவாத அரசின் உடைய பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை இப்போது பதவியேற்று இருக்கின்ற கோட்டாபய அரசின் ஊடாக நாங்கள் காண்கின்றோம்.
சாதாரணமாக இது வரையும் நடந்த பல்வேறு விதமான நினைவு தினங்களுக்கு எல்லாம் பயங்கரவாத முலாம் பூசி பயங்கர வாதத்தினை மீள் எழுச்சி செய்வதற்காகவே இந்த நிகழ்வுகள் நிகழ்த்தப்படுகின்றன என்ற ஒரு செய்தியை அது வெளியிட்டு இருந்தது.
அது மாத்திரமல்லாமல் அதானே பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக அணுகி அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை இந்த அரசு மேற் கொண்டிருந்தது.
அதன் காரணத்தினாலே பலர் கைது செய்யப்பட்டு வைக்கின்றார்கள், பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்ற நிலவரம் இந்த மண்ணிலே காணப்படுகின்றது.
தற்பொழுது மே 18 நிகழ்வுகளை இல்லாது செய்வதனூடாக தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலை ஒன்றை இலங்கை அரசு புரியவில்லை என்பதைச் சர்வதேச ரீதியாக நிரூபிப்பதற்காக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இந்த மண்ணிலே கொண்டாடப்படக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது .
உண்மையில் யுத்தம் முடிந்து இன்று பல வருடங்கள் ஆகியும் இந்த அரசாங்கம் தான் பெற்ற வெற்றி அமைதியிலிருந்து தான் இன்னும் மீளவில்லை என்பதைத் தான் இந்த அரசாங்கம் நிரூபித்து வருகின்றது.
சில சமயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் காலம் மிகச் சிறந்தது என்று எண்ணும் அளவிற்கு இன்றும் அரசாங்கம் இந்த மண்ணிலே மிகக் கொடூரமான ஒடுக்கு முறைகளை மேற்கொண்டு வருகின்றது.
கடந்த வருடங்களில் கூட இந்த கோவிட் -19 என்கின்ற பேரிடரைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களுடைய உரிமைகளை இல்லாத செய்கின்ற பல்வேறு விடயங்களை அது கையாண்டுள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி எனப்படுகின்ற ஒரு சாதாரண ஜனநாயக ரீதியான போராட்டத்தினை தடுப்பதற்கும் அதன் பின்னால் வந்த தமிழ் மக்களுடைய எல்லா விதமான நினைவு நாட்களையும் தடுப்பதற்கும் கோவிட் -19 என்கின்ற ஒன்றைப் பாதுகாப்பு அரணாக இந்த அரசாங்கம் கையில் எடுத்து இருந்தது.
இப்பொழுது மே 18 நினைவு நாளினை நினைவு கூர்வதற்குக் கூட கோவிட் -19 என்கின்ற ஒன்றினை கையில் எடுத்து பலருக்கு தடையுத்தரவை போட்டு வைக்கின்றது.
குறிப்பாக அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாகக் கொன்று ஒழிக்கப்பட்ட பல்லாயிர கணக்கானவர்களுடைய உறவுகள் கூட விளக்கேற்றி அஞ்சலி செலுத்த முடியாத ஒரு நாடாக எதிர்வரும் மே 18 ஆம் திகதி உருவாக்கப்பட்டிருப்பது என்பது மிகக் கொடூரமான செய்தி இவ்வாறான தடையினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர் 18ஆம் திகதி அனைத்து தமிழ்
மக்களும் தங்களது இல்லங்கள் தோறும் மற்றும் வர்த்தக நிலையங்களிலும்
விளக்குகள் ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ளுமாறு
கேட்டுக்கொண்டார்.