காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கான மருந்துவக் களஞ்சியசாலை திறப்பு (Video)
மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் லாபீர் தலைமையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள மருந்துவக் களஞ்சியசாலை இன்று (16) காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு மருந்துவக் களஞ்சியசாலையினை திறந்துவைத்துள்ளார்.
இதன்போது சுகாதார துறையினர் அர்ப்பணிப்புடன் செயற்படும் காலமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் சுமார் 30 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளுடனும் இந்த மருந்துவக் களஞ்சியசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கோவிட் வைத்தியசாலையாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை செயற்பட்ட காலத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் அனைவரும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மருத்துவச் சேவைகளுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.எஸ்.தொளபீக் ஆகியோரும் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.