கொவிட் தொற்றாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும்:தயாசிறி ஜயசேகர
கொவிட் தொற்றாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டுமென ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக கொக்கல தனிமைப்படுத்தல் மையத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இன்றைய தினம் வீடு திரும்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்று பாரியளவில் பரவி வருவதாகவும், அனைத்து தொற்றாளிகளையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்வது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதுடன், அரசாங்கத்திற்கு பாரிய செலவினை ஏற்படுத்தக் கூடியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோய்த் தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்துவது நெருக்கடிகளை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோய் அறிகுறிகள் தென்படும் நபர்கள் குடும்பத்திலிருந்து விலகியிருந்து சுகாதார தரப்பினருக்கு அறிவித்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் நடைமுறையே மிகவும் பொருத்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் வீடுகளிலேயே சுயதனிமையில் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென தாம் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.