மத்தியக் கிழக்கு போர் சூழல் : எமது நிலம் எவருக்கும் போர்க்களம் அல்ல! இலங்கையின் முக்கிய அறிவிப்பு
இலங்கையின் நிலம், வான்பரப்பு அல்லது கடல் எல்லைகளை எந்தவொரு நாட்டுக்கும் சார்பாகவோ அல்லது மற்றுமொரு தரப்புக்குத் தீங்கு விளைவிப்பதற்கோ பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சபையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைதிக்காக குரல் கொடுக்கும் ஜனாதிபதி..
நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து அமைச்சர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமது அரசு பதவியேற்றபோது, இவர்களுக்குச் சர்வதேச உறவுகள் கையாளத் தெரியாது என்றும், ஒரு பெட்டிக்கடையைக் கூட நடத்தத் தகுதியற்றவர்கள் என்றும் விமர்சித்தார்கள். சர்வதேச நாணய நிதியம் நாட்டை விட்டு வெளியேறிவிடும் எனக் கூறினார்கள்.

ஆனால், இன்று எமது ஜனாதிபதியின் இராஜதந்திரத்தையும், சர்வதேச சமூகம் எமது அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் கண்டு அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஈரான் - அமெரிக்கா மோதல் போன்ற சர்வதேசப் பிரச்சினைகள் முழு உலகையும் பாதிக்கின்றன. உலகில் எங்கு போர் நடந்தாலும் பாதிப்பு மனித உயிர்களுக்குத்தான். அதனால்தான் எமது ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் எப்போதும் உலக அமைதிக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும், எமது அரசின் தன்னம்பிக்கையும் மனச்சாட்சியும் மிகப்பெரியது. சர்வதேச சட்டங்கள் மற்றும் சாசனங்களுக்கு உட்பட்டு நாம் எப்போதும் நடுநிலையான நாடாகவே செயற்படுவோம்.
பிற நாடுகளின் மோதல்களுக்காக எமது வளங்களைப் பயன்படுத்த இடமளிக்க மாட்டோம். மனிதாபிமானத்தை முன்னிறுத்தி, எந்தவொரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடுநிலையான வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam