ஈரான் ஒப்பந்தம் - உக்ரைன் போர் : பிரான்சில் ஜி7 உச்சிமாநாடு ஆரம்பம்
பிரான்சின் எவியான்-லெ-பெய்ன்ஸ் நகரில் ஜி7 நாடாளுமன்றத் தலைவர்களின் உச்சிமாநாடு செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா - ஈரான் இடையேயான புதிய அமைதி ஒப்பந்தம் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் ஆகிய விவகாரங்கள் முதன்மைப் பேசுபொருளாக உருவெடுத்துள்ளன.
அதிகார பூர்வ ஒப்பந்தம்
மாநாட்டை நடத்தும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், மத்திய கிழக்கில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள ஆரம்பகட்ட உடன்பாட்டை விரைந்து இறுதிசெய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சர்வதேச எரிசக்திப் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் பாதுகாப்பாகத் திறப்பது மற்றும் அதற்கு மாற்றான கடல் வழித்தடங்களைக் கண்டறிவது குறித்தும் இந்த மாநாட்டின் பணி மதிய உணவுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் திங்கட்கிழமை மின்னணு முறையில் முதற்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் திறக்கப்படும் என்று ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்கா முன்வைக்கும் அமைதித் திட்டங்கள்
இம்மாநாட்டின் மற்றொரு முக்கிய அமர்வாக 'உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துதல்' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.

இதில் உக்ரைன் ஜங வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நேரில் பங்கேற்கிறார்.
ரஷ்யாவுக்குச் சாதகமாக அமெரிக்கா முன்வைக்கும் அமைதித் திட்டங்கள் உக்ரைனைப் பாதிக்கும் என்பதால், ட்ரம்பை சமாதானப்படுத்த ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.
அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜி7 மாநாட்டின் பாதுகாப்புப் பணிகளுக்காக பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதிகளில் சுமார் 16,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.