வெற்றுக்காசோலைகளில் மோசடியாக கையொப்பமிட்ட விவகாரம்! விசாரணைகள் ஆரம்பம்
வெற்றுக்காசோலைகளில் மோசடியாக கையொப்பமிட்டமை தொடர்பான முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் விசாரணை செய்வதற்காக மூவர் அடங்கிய விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் மூவர் அடங்கிய விசாரணைக்குழுவினை நியமித்துள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
வெற்றுக்காசோலைகளில் மோசடியாக கையொப்பம்
குறித்த உத்தியோகத்தர் 33 வெற்றுக்காசோலைகளில் மோசடியாக கையொப்பமிட்டமையானது NP/11/MN/ACLG/2023/01 இலக்க 2024.01.02 ஆம் திகதி கணக்காய்வு அவதானிப்புக்கள் - 2023 என்ற தலைப்பிடப்பட்ட மாகாண உள்ளக கணக்காய்வாளரது அறிக்கையின் பந்தி இல 3.1 மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பந்தி இல 3.2, 3.3, 3.4 மற்றும் 3.5 ஆகியவற்றிலும் காசோலை முறைகேடுகளை வெளிக்கொணர்ந்து உள்ளமை சுட்டிக்காட்டப் பட்டிருந்தது.
குறித்த கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்ட மேற்படி அலுவலர் தொடர்பான ஐயவினா தொடர்பில் விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக ஆரம்ப புலனாய்வு குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
காசோலை மோசடி தொடர்பான முறைப்பாடு
இந்த விசாரணைக்குழுவின் தலைவராக வடக்கு மாகாண இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளர் கே.சுரேஷ் குமார் மற்றும் உறுப்பினர்களாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச்செயலாளர் ச.ராதிகா மற்றும் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் அலுவலக பொறியியல் சேவைகள் நிர்வாக உத்தியோகத்தர் ரி.அருங்கலைச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காசோலை மோசடி தொடர்பான முறைப்பாடுகளுக்கு அமைவான விசாரணை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் அண்மையில் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெற்றபோது மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் குறித்த விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்த நிலையில் வடமாகாண ஆளுநரின் உத்தரவில் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தொடருந்து வரலாற்றில் ஏற்பட்ட மோசமான நிலை! சகல தொடருந்து நிலையங்களிலும் தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு