இலங்கை தொடருந்து வரலாற்றில் மோசமான நிலை! சகல தொடருந்து நிலையங்களிலும் தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடருந்து நிலையங்களிலும் பொதுத்தொலைபேசி இணைப்புகளும் கட்டணம் செலுத்தப்படாத காரணத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பயணிகளுக்கும் நிலைய ஊழியர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக செலுத்தப்படாத கட்டணங்கள்
இலங்கை தொடருந்து வரலாற்றில் முதன்முறையாக செலுத்தப்படாத கட்டணங்கள் காரணமாக, அனைத்து தொடருந்து நிலையத் தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டமையால், பயணிகள் தொடருந்து நேர அட்டவணைகள் மற்றும் பிற அத்தியாவசியத் தகவல்களைப் பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஏராளமான விசாரணைகள் தினசரி தொலைபேசி சேவைகள் மூலம் கையாளப்பட்டு வந்தன. பெப்ரவரி மாதம் முதல் எந்தக் கட்டணமும் செலுத்தப்படாத காரணத்தினாலேயே, அனைத்து நிலையங்களிலும் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கததின் கீழ் தொடருந்து திணைக்களத்திற்கு வெளியிலிருந்து நியமிக்கப்பட்ட தற்போதைய தொடருந்து பொது முகாமையாளர் எடுத்த நடவடிக்கைகள் உட்பட, தொடருந்து திணைக்களத்தினுள் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக மாற்றங்களும் செயல்பாட்டுத் தடைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.
பொறுப்புகளை பகிர்ந்தளிப்பதில் சிக்கல்
சாத்தியக்கூறு ஆய்வு இன்றி ஏற்கனவே இருந்த ஒரு நிர்வாக அலுவலகம் கலைக்கப்பட்டதும்,பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதில் உள்ள சிக்கல்களும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சேவைத்தடையானது, இலங்கை தொடருந்து திணைக்களத்தின் நிர்வாகத் திறன் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, பொதுமக்களுக்குப் பயணம் தொடர்பான தகவல்களை வழங்குவதில் நிலையத் தொலைபேசி இணைப்புகள் முக்கியப் பங்கு வகிப்பதால் அது தொடர்பான சேவைகளில் ஏற்படும் தடங்கல்கள் பொதுமக்களைப் பெரிய அளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.