அநுர அரசில் தொடரும் அதிரடி! நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்
இலங்கையில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகள் அடுத்து வரும் வாரங்களில் இடம்பெறவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக நாட்டை விட்டு தப்பியோட அவர்கள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.
இந்நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் கீழ் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் உயர் அரச அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்ட நடவடிக்கை
அவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பதற்காக, அரச புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்த்து, குறித்த நபர்கள் பல்வேறு வழிகளில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக, அவர்களைக் கண்காணிக்குமாறு அரசின் உயர்மட்டம் புலனாய்வுத்துறைக்கு அறிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் கடந்த காலங்களில் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு எதிராக நீதிமன்றத்தினூடாக வெளிநாட்டுப் பயணத் தடைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.