இணையத்தில் விற்கப்பட்ட சிறுமி! பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்
கல்கிஸ்ஸை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இணையத்தில் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மகளிர் சக்தியின் பிரதிநிதிகளால் இன்று கொழும்பு -14 முக்தார் பிளாசாவில் உள்ள பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கையில்,
15 வயது சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்தியமை குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் குறித்த சிறுமியின் தாயும் உள்ளடங்குகிறார்.
கல்கிஸை பொலிஸ், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு , குற்ற விசாரணைப் பிரிவு என்பன தொடர்ந்தும் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.