காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணைகள் ஆரம்பம்(Video)
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் வைத்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விசாரணை மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(12.10.2022) இடம்பெற்றுள்ளது.
இந்த விசாரணையில் கொழும்பு மற்றும் மட்டக்களப்பை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு விசாரணைகளை மேற்கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
முறைப்பாடுகள் பதிவு
இதன்போது காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் கலந்துகொண்டு தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று(12.10.2022) மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசாரணைக்கு வருமாறு 75 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை மாவட்டத்தில் மொத்தமாக 450 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் 5 நாட்கள் இவ்வாறு காணாமலாக்கப்பட்ட உறவினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவுள்ளதாக இதன்போது கலந்து கொண்டிருந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகள்
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கு இணங்க அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கு காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலலகம் பரிந்துரை செய்யும் எனவும் இதன்போது குறித்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்படி பிரதேச செயலகத்தில் 6 பனல்களில் இடம்பெற்ற இம்முறைப்பாட்டு பதிவுகளில், அப்பகுதியைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு தமது உறவுகள் காணாமல் போனவிடயம் தொடர்பில் தமது முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.









