கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது இவ்வாண்டு நடைபெறமாட்டாது என ஆலய பரிபாலனசபையினர் அறிவித்துள்ளனர்.
கோவிட் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பரிபாலசபையினர் தெரிவித்துள்ளனர். இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் ஊடாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் 15 பணியாளர்களுடன் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்த நிலையில், அதன் பின்னர் நடைபெற்ற கோவில் நிர்வாகத்தினரின் கூட்டத்தில் நாட்டில் நிலவும் கோவிட் தொற்று காரணமான சுகாதார நிலையினை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஆலயத்தின் திருவிழாவை நடாத்துவதில்லையென முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஆலய தலைவரும், வண்ணக்கருமாகிய பூபாலபிள்ளை சுரேந்திரராஜா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் கோவிட் தொற்று காரணமாக நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், கடந்த (08) திகதி ஆலயத்தின் மகோற்சவ பூசைகள் 15 பணியாளர்களை மாத்திரம் அனுமதிக்கப்பட்டு தேரோட்ட பெருவிழா நடைபெறாமல் சாதாரண பூசைகளுடன் நடைபெற இருந்த நிலையில் மேற்படி அறிவிப்பானது ஆலய நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை மட்டக்களப்பில் சில ஆலயங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பக்தர்களுடன் திருவிழாக்கள் நடைபெற்றும் இறுதிக்கட்டத்தில் பக்தர்களின் வருகை அதிகரித்ததனால் ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றம் வரை செல்ல வேண்டியேற்பட்டதனையெல்லாம் எம்மால் கண்டுக்கொள்ள முடிந்தமையினால்,இவ்வாண்டுக்குரிய கிரியைகளுடன் எதிர்வரும் ஆண்டில் ஆலய திருவிழாவினை தான்தோன்றீஸ்வர பெருமானின் அருளாசியோடு நடத்துவோம் என ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஆலய செயலாளரும் வண்ணக்கருமாகிய இளையதம்பி சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.