தனித்தனியாக தேர்தலுக்கு முகம்கொடுப்பது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் ஆராய்வு: சுமந்திரன்
தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது தொடர்பில் தொழிநுட்ப ரீதியில் ஆராயப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று (11.12.2022) வவுனியா, குடியிருப்பு கலாச்சார மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும், தற்போது ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படும் அரசியல் அமைப்பு விடயங்கள், கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும் உள்ளூராட்சி மன்ற வட்டார எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டமை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
அரசியல் தீர்வு
அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கட்சிகளோடு பேசிய மூன்று விடயங்களை அரசாங்கத்திற்கு முன் வைத்துள்ளோம்.
அரசாங்கத்திடம் தற்போது அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும், தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்படவேண்டும், காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்.
இரண்டாவதாக தற்போது அரசியலமைப்பிலும் சட்டங்களிலும் உள்ள அதிகார பகிர்வு விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மூன்றவதாக வடக்கு கிழக்கில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு முறையில் சமஷ்டி கட்டமைப்பில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.
இவ்வாறு முன்வைத்த 3 விடயங்களையும் சமாந்தரமாக முன்கொண்டு செல்வதென தீர்மானித்து அரசாங்கத்திற்கு முன் வைத்துள்ளோம். சில கால எல்லைகளுக்குள் இவை நடத்த வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு கூறவுள்ளோம்.
அவற்றை ஏனைய கட்சிகளுடனும் பகிர்ந்து ஒற்றுமையான நிலைப்பாட்டை இந்த பேச்சுவார்த்தையின் போது எடுக்க தீர்மானித்துள்ளோம். தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இருக்கும் கட்சிகளை ஜனாதிபதி பேச்சுக்கு அழைத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றம்
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் சம்பந்தமாக தற்போது இடம்பெறும் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளோம்.
இந்த எல்லை மீள் நிர்ணயம் சில இடங்களில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. அவற்றை உடனடியாக ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்துவதாகவும், அத்தோடு 60 இற்கு 40 என்ற வீதத்தில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதாக உள்ள சட்டம் 70 இற்கு 30 ஆக மாற்றப்பட வேண்டும் என்பதனை நாடாளுமன்றத்திலும் அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்துவதாகவும் தீர்மானித்துள்ளோம்.
அடுத்த மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 17, 18 ஆம் திகதிகளில் இடம்பெறும். அங்கு எமது கட்சியின் தேசிய மாநாடு தொடர்பான திகதியை தீர்மானிப்போம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது தொடர்பில் தொழிநுட்ப ரீதியில் இவ் விடயம் ஆராயப்பட்டுள்ளது.
வட்டார ரீதியாக ஒரு வீதமும் அதற்கு மேலதிகமாக விகிதாசார முறையில் இன்னொரு வீதமும் சேர்த்துக்கொள்ளப்படுவது தொடர்பில் சென்ற முறை எமக்கு இருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் பார்த்து தனித்தனியாக போட்டியிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கூடுதலான உறுப்பினர்களை சேர்க்குமா இல்லையா என்கின்ற தொழிநுட்ப ஆராட்சியில் ஈடுபட்டுள்ளோம்.
அரசியல் கைதிகள்
ஜனாதிபதியுடனும் நீதி அமைச்சருடனும் நான் பேசிய போது அரசியல் கைதிகள் 32 பேர் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதில் ஜனாதிபதியின் மன்னிப்பில் விடுதலை செய்யப்படக்கூடியவர்கள் எவரும் இல்லை என்ற கருத்தும் கூறப்பட்டது. எனினும் ஜனாதிபதி அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியில் அவர்கள் குறித்த கொள்கையில் செயற்படுகின்றனர்.
அதாவது தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர்கள், மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் குண்டு வைத்தவர்கள், அரசியல் படுகொலைகளில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களை விடுவிப்பது இல்லை என முடிவு அவர்களிடம் காணப்பட்டது.
எனினும் அவர்கள் நீண்டகாலம் சிறையில் இருந்திருக்கின்றனர் என்ற அடிப்படையில் அதனை மறுபரிசீலனை செய்வது என தெரிவித்துள்ளனர் என சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
