இலங்கைக்கான இந்திய தூதுவர் கண்டிக்கு விஜயம்
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா கண்டி மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
கண்டி மாவட்டத்திற்கு சென்ற அவருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வரவேற்பளித்துள்ளார்.
இதன்போது இந்திய தூதரகத்தினால் மத்திய மாகாண ஆயுர்வேத மருத்துவத் திணைக்களத்தின் தலைமையில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாமை தூதுவர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
அதனையடுத்து, கண்டி ஹந்தான ஸ்ரீ வாணி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.
அங்கு நிலவும் குடிநீர் பிரச்சினை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு உடன் தீர்க்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டதுடன், அதனை நடைமுறைப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
அதன் பிறகு, கண்டி ஹந்தானை மேற்பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தை பார்வையிட்டதுடன் வீட்டு திட்டத்தின் பயனாளர்களுடன் கலந்துரையாடி உள்ளார்.
நன்றி தெரிவித்த மக்கள்
இதன்போது, இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த மக்கள் மேலும் இவ்வாறான வீடமைப்புத் திட்டங்களை பெற்றுத் தருமாறும் வேண்டுகோள் விடுத்தனர். அத்தோடு, கண்டி கித்துள்முல்ல பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான நில தயார்படுத்தலையும் பார்வையிட்டுள்ளார்கள்.
குறித்த நிகழ்வில் உயர்ஸ்தானிகரின் மனைவி, கன்சியூலர் எல்டோஸ் மாத்தியூஸ், உதவி உயர்ஸ்தானிகர் வைத்தியர் ஆதிரா மற்றும் வருகை தந்த இந்திய அரசின் அதிகாரிகள், அரச அதிகாரிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி பொதுச் செயலாளர் செல்லமுத்து, மாவட்ட தலைவர்கள், தோட்ட கமிட்டி தலைவர்கள், அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |