இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர் கைதுகள் வருகையை கட்டுப்படுத்தும்: சம்மேளனத் தலைவர் தெரிவிப்பு
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய கடற்தொழிலாளர்களை தொடர்ச்சியாக கைது செய்வதன் மூலம் அவர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் புனிதப் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று(26.11.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துமீறிய மீன்பிடி
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்துமாறு பல வருடங்களாக கோரிக்கை முன்வைத்தும் எவ்வித பயனும் எமது கடற்தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை.
அண்மையில் கூட யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கடற்தொழிலாளர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து இரு நாட்டு தலைவர்களுக்கும் கோரிக்கை கடிதத்தையும் கையளித்தோம்.
எமது பிரச்சினை தொடர்பில் இரு நாட்டு தலைவர்களிடம் இருந்து சாதகமான பதில் இதுவரை கிடைக்கவில்லை.
எமது கடற்பரப்பினுள் எல்லை தாண்டிய இந்திய கடற்தொழிலாளர்களை கடற்படை கைது செய்யும் நிலையில் கைதுகள் போதாது என கடற்தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் கருதுகிறோம்.
இந்திய கடற்தொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் தொடர்ச்சியான கைது நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மேற்கொள்ள வேண்டும்.
கைதுகள் குறைக்கப்படுமாயில் கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய வருகை அதிகரிக்கும் இதனால் எமது கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் சூழ்நிலை அதிகரிக்கும்.
ஆகவே இலங்கை கடற்படை இந்திய அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியான கைது நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் ”என குறிப்பிட்டுள்ளார்.




