போராடி தோற்ற இலங்கை அணி! ஸ்மிருதி மந்தனா படைத்த சாதனை
இலங்கை மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்திய அணி வெற்றி
இதில் நடந்துமுடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று(28) நடைபெற்றது.
நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர்.

இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ஓட்டங்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 80 ஓட்டங்களும், ஷபாலி வர்மா 79 ஓட்டங்களும் எடுத்தனர்.
ரிச்சா கோஷ் 40 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 222 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை வீராங்கனைகள் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது.

இலங்கை அணிக்கு அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்த ஹசினி பெரேரா 20 பந்துகளில் 33 ஓட்டங்களையும், சமரி அத்தபத்து 37 பந்துகளில் 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
இவர்களைத் தவிர, ஹர்ஷிதா சமரவிக்ரம 13 பந்துகளில் 20 ஓட்டங்களையும், நிலக்ஷிகா சில்வா 11 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஸ்மிருதி மந்தனா
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் 80 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ஓட்டங்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
மேலும் 10,000 ஓட்டங்களைக் கடந்த 2ஆவது இந்திய வீராங்கனை ஆனார். இந்தப் பட்டியலில் மிதாலி ராஜ் 10868 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக 10,000 ஓட்டங்களைக் கடந்த 4வது வீராங்கனை ஆவார்.