அடுத்த 36 மணிநேரத்திற்கான வானிலையில் மாற்றம்! பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை
அடுத்த 36 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28) மாலை 04.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 36 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
கனமழை பெய்யக்கூடும்
அதன்படி, ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சபரகமுவ மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், வடக்கு மாகாணம், கண்டி, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.