விடுதலைப் புலிகளை தோற்கடித்த இலங்கை: ஏனைய நாடுகளுக்கு இந்தியா வழங்கியுள்ள முக்கிய தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகரமாக தோற்கடித்த இலங்கையிடம் ஏனைய நாடுகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென இந்தியா கடற்படைத் தளபதி அட்மிரால் கரம்பீர் சிங் (Admiral Karambir Singh) தெரிவித்துள்ளார்.
கோவா கடல்சார் பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ளவுள்ளன. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றை முறியடிப்பதற்கு இவ்வாறு புலனாய்வுத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட உள்ளன.
இந்து சமுத்திர பிராந்திய வலய நட்பு நாடுகள் கூட்டாக இணைந்து கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளன.
நட்பு நாடுகளுக்கு கடல்சார் பாதுகாப்பு குறித்த பயிற்சிகளை வழங்க இந்தியா நடவடிக்கை எடுக்கும்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை வெற்றிகரமாக தோற்கடித்தது. ஏனைய நாடுகள் இலங்கையிடமிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கடல்சார் பாதுகாப்பினை விஸ்தரித்துக் கொள்ள விரும்பும் பிராந்திய வலய நட்பு நாடுகளுக்கு சகல வழிகளிலும் இந்தியா உதவிகளை வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.