எமது யோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கினால் 21 வது திருத்தத்தை ஆதரிப்போம்
தமது அணியினர் முன்வைக்கும் திருத்தங்களுக்கு முக்கியத்துவம் வழங்கினால், 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கப்படும் என அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியின் பிரதிநிதியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட யோசனை சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் 9 கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள்
தமது கட்சிகளின் கூட்டணி 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சம்பந்தமான ஆவணத்தை ஆராய்ந்து யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
20 வது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு பகிரும் நோக்கில் 21வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
அதில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உட்பட இலங்கை அரசின் உயர் பதவிகளை வகிக்க தடைவிதிக்கும் ஷரத்து உள்ளடக்கப்பட வேண்டும் என இந்த கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.