கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 30 அடியை அண்மித்துள்ளதுடன் ஏனைய குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
வடமாகாணத்தின் அதிக நீர் விநியோக பரப்புகளையும், விவசாய நிலங்களையும் கொண்ட கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத்திணைக்களத்தின் 9 பாரிய மற்றும் நடுத்தர குளங்களின் நீர்மட்டம் தற்போது அதிகரித்துள்ளன.
அண்மைய நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மேற்படி குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், ஐந்து குளங்கள் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய ஆரம்பித்துள்ளதுடன், ஏனைய நான்கு குளங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று (25) காலை வெளியிட்டுள்ள நிலவர அறிக்கையின்படி,
கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 36 அடி நீர் கொள்ளவு கொண்ட இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 29 அடி 8 அங்குலமாக உயர்வடைந்துள்ளது.
26 அடி கொள்ளவு கொண்ட கல்மடு குளத்தின் நீர்மட்டம் 25 அடி 10 அங்குலமாகவும் காணப்படுவதுடன் பிரமந்தனாறுக் குளம் மற்றும் கனகாம்பிகை குளம் என்பன கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்மட்டம் உயர்வடைந்து வான் பாய்ந்து வருகின்றன.
இதேபோன்று கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள அக்கராயன் குளத்தில் நீர் மட்டம் 22 அடி 5 அங்குல மாகவும், கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர்மட்டம் 07அடி 2 அங்குல மாகவும் உயர்வடைந்துள்ளது.
அத்துடன் புதுமுறிப்புக்குளம் குடமுருட்டிக்குளம் வன்னேரிக் குளம் என்பவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து வான் பாய்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் கரியாலை நாகபடுவான் பகுதியில் 43.5 மில்லி மீட்டர் மழையும், அக்கராயன் பிரதேசத்தில் 38. 5 மில்லி மீட்டர் மழையும், இரணைமடு பகுதியில் 53.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |