மலையகத்தில் முட்டை விலை அதிகரிப்பு: விற்பனையிலிருந்து விலகிய வர்த்தகர்கள் (Video)
மலையகத்தில் முட்டை விலை அதிகரித்துள்ளதன் காரணமாக அதிகமான வர்த்தகர்கள் முட்டை விற்பனையிலிருந்து விலகியுள்ளனர்.
இதனால் மலையக பகுதியில் வாழும் சிறுவர்களுக்கு மந்த போசனம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினையடுத்து, மலையகத்தில் வாழும் மக்கள் போசாக்கான உணவு உட்கொள்வதில் நெருக்கடியான நிலையை சந்தித்துவருகின்றனர்.
இந்நிலையில் போசாக்கு மிக்க உணவாக முட்டையினையே உட்கொண்டு வருகின்றனர்.
தற்போது முட்டை ஒன்றின் விலை 60 முதல் 65 வரை விற்கப்படுவதனால் இன்று முட்டை கூட சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் வருமானம் குறைந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வாழ்வதனால் மந்த போசனை நிலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் போசனை மிக்க உணவாக இருந்த முட்டையின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதனால் மந்த போசன நிலை மேலும் அதிகரித்து பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் இதனால் கல்வி, சுகாதாரம் ,போசாக்கு உள்ளிட்ட பல விடயங்களில் பாதிப்புக்கள் ஏற்படப்போவதாக பலர் எச்சரித்து வருகின்றனர்.
அதிகரித்த முட்டை விலை
அரசாங்கம் முட்டையினை பொது மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக கட்டுப்பாட்டு
விலையினை நடைமுறைப்படுத்தியது.இதனால் பல வர்த்தகர்கள் முட்டை விற்பனை செய்வதனை
நிறுத்திக்கொண்டனர்.
குறிப்பாக தோட்டப்பகுதியிலும் நகர் பகுதியிலும் வர்த்தக நிலையங்களில் முட்டை பெற்றுக்கொள்ள முடியாத நிலையே தற்போது காணப்படுகின்றது.
இது குறித்து பொது மக்கள் மற்றும் வர்த்தகர்கள் கருத்து தெரிவிக்கையில், '' நாங்கள் எங்களுக்கு உள்ள வருமானத்தில் எங்கள் பிள்ளைகளுக்கு மீனோ இறைச்சியோ வாங்கி கொடுக்க முடியாது. காரணம் அவை அதிக விலையில் விற்கப்படுகின்றன.
தோட்ட கடைகளில் முட்டை விற்பனை
அதனால் போசனை மிக்க உணவாக நாங்கள் முட்டையினை தான் கொடுத்து வந்தோம். இப்போது விலை அதிகரிப்பு காரணமாக தோட்ட கடைகளில் முட்டை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் எங்கள் பிள்ளைகளுக்கு முட்டை ஒன்றை கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே இது குறித்து மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்கமும் கவனமெடுத்து குறைந்தது கோழி வளர்ப்பினையாவது மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”என தெரிவித்தார்.
இது குறித்து பேக்கரி உணவு தயாரிப்பில் ஈடுபடும் நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ''நான் கடந்த பல வருடங்களாக பேக்கரி உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்ட முட்டை விலை காரணமாக தற்போது முட்டையில் தயாரிக்கப்படும் கேக், ஸ்பன்ஞ், முட்டை ரோல்ஸ், போன்ற பல தயாரிப்புக்களை நிறுத்தி விட்டு மாஜரினால் தயாரிக்கக்கூடிய உணவுகளை மட்டும் தயார்படுத்தி வருகிறேன்.'' என தெரிவித்தார்.
இது குறித்து முட்டை வியாபாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ''நான் கடந்த பல வருட காலமாக முட்டை விற்பனையில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் அந்த தொழிலினை தற்போது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் பண்ணையாளர் அதிக விலைக்கு தான் எங்களுக்கு முட்டையினை கொடுக்கிறார்கள். நாங்கள் ஒரு ரூபா வைத்து விற்பனை செய்தாலும் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக நீதி மன்றில் வழக்கு தொடர்கிறார்கள். இதனால் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என அபராதம் செலுத்த வேண்டியுள்ளது.
முட்டை இறக்குமதி
அது மட்டுமல்லாமல் ஒரு பெட்டி முட்டைக்கு நான்கு, ஐந்து முட்டைகள் உடைந்து விடுகிறது. இதனால் முட்டை விற்பனை செய்வது எங்களுக்கு நட்டம். வேறு விற்பனை இதனுடன் செய்திருந்தால் முட்டை விற்பனையினை எப்போவோ நிறுத்தியிருப்பேன்.
ஆகவே அரசாங்கம்
இந்தியாவிலிருந்தாவது முட்டையினை இறக்குமதி செய்து அனைவருக்கும் குறைந்த
விலையில் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் தோட்டங்கள் தோறும் முட்டை பண்ணையாளர்களை உருவாக்க நடவடிக்கை
எடுப்பதன் மூலம் மாத்திரமே இதற்கு தீர்வு காண முடியும்.”என தெரிவித்தார்.
இன்று மலையக மக்களுக்கு உள்ள நிறை உணவு என்றால் அது முட்டை மாத்திரம்தான். கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவில் முட்டை சேர்க்கப்பட்டு வந்த போதிலும் தற்போது முட்டை வழங்குவது கூட கேள்விகுறியாகியுள்ளன. இதனால் அரசாங்கம் அதிக கவனமெடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |