50 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய வருமான வரிப் பரிசோதகர் கைது!
மொனராகலை பிரதேச சபையில் கடமையாற்றும் வருமான வரிப் பரிசோதகர் ஒருவர், 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் பற்றிய சாத்தல்களை புலனாய்வு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை நேற்று(29.03.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் வாங்கி சிக்கிய அதிகாரி
அதிகாரபூர்வ விடயம் ஒன்றைச் சாதகமாகச் செய்து கொடுப்பதற்காக, மேற்படி அதிகாரி 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகக் கோரியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆணைக்குழுவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இரகசியச் சோதனை நடவடிக்கையின்போது, குறித்த பணத்தைப் பெற்றுக்கொண்ட வேளையில் அவர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான அதிகாரி தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர் இன்று(30) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.