தொடர் சரிவில் கிழக்கு மாகாண நிர்வாகம் - இதுதானா அரசின் மாற்றம்: இம்ரான் எம்.பி கேள்வி
வினைத் திறனற்ற நியமனங்களால் இந்த அரசாங்கத்தில் கிழக்கு மாகாண நிர்வாகம் மிகவும் பலவீனமடைந்துள்ளது என திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று(11.06.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் ஸ்தம்பிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணசபை நிர்வாகம் மிகவும் பலவீனமடைந்துள்ளதால் அதன் இணையத்தளம் எந்தவிதமான இற்றைப்படுத்தலுமின்றி இருக்கின்றது. இதனால் பொதுக்களால் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்கள தொடர்புகளில் சுமார் இரு வருடங்களுக்கு முன் அங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்றவரின் பெயர் உள்ளது.
பாலர் பாடசாலைப் பணியக தொடர்பு தகவல்களில் தவிசாளருடைய பெயரைத் தவிர வேறு எவரது பெயரும் இல்லை. தகவல் உத்தியோகத்தர் யார் என்பது கூட இல்லை.
அரசாங்கம் சரியாக செயற்படவில்லை..
அதே போன்று, சுகாதார அமைச்சு தொடர்பு பட்டியலில் அங்கிருந்து சில மாதங்களுக்கு முன் இடமாற்றம் பெற்றுச் சென்ற திட்டமிடல் பணிப்பாளரின் பெயர் இன்னும் உள்ளது.
அத்துடன், பெரும்பாலான தொடர்பு இலக்கங்கள் இன்னும் இற்றைப்படுத்தப்படாமல் உள்ளது. கிழக்கு மாகாணத் தலைமைத்துவம் நிர்வாக விடயங்களில் மிகவும் பலவீனமானதாக இருப்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

கிழக்கு மாகாண சபை நிர்வாகத்திலுள்ளவர்கள் ஊடகங்களில் தம்மைக் காட்டிக் கொள்வதில் உள்ள அக்கறை உள்ளக நிர்வாகங்களில் இல்லை.
இதனால் பொதுமக்கள் தான் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது தானா இந்த அரசாங்கத்தின் “System Change” என்பதை கேட்க விரும்புகிறேன் என்றார்.