வடக்கில் முறையற்ற ஆசிரிய இடமாற்றம் - ஆளுநர் அலுவலகம் முன்பாக கொட்டும் மழையில் போராட்டம்
வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச்சபையை மீறி முறையற்ற ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று (15) ஆளுநர் அலுவலகம் முன்பாக கொட்டும் மழையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண கல்வியை திட்டமிட்டு அழிக்க முயற்சி
வடக்கு மாகாண கல்வியை திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து ஊழல் கல்வி அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

இடமாற்றச்சபையை மீறி தாங்கள் கட்சிகளுக்கு சார்பானவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு சார்பானவர்களை யாழ்ப்பாணத்திலே தொடர்ச்சியாக தங்க வைத்துவிட்டு கஷ்டப் பிரதேசங்களில் ஆசிரிய சேவையை செய்த ஆசிரியர்களை மீண்டும் வெளிமாவட்டம் அனுப்புகிறார்கள்.
தமக்கு சார்பானவர்களை யாழ்ப்பாணத்தில் தக்க வைத்துக்கொள்வதற்காக திட்டமிட்ட முறையில் சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற போர்வையில் யாழ். தீவகம் மற்றும் மருதங்கேணிப் பிரதேசங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சேவை ஆற்றிய ஆசிரியர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.
ஊழல் புரிந்த பல அதிகாரிகள் தமது பதவிகளை தக்கவைத்துக்கொள்வதற்கும் உயர் பதவிகளை அடைவதற்காகவும் தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் இந்த முறைகேடான இடமாற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த இடமாற்றத்தில் பல குறைபாடுகள் இருக்கிறது என வட மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் ஆசிரியர் சங்கம் தெரியப்படுத்தியும், அவரும் தேசிய மக்கள் சக்தியின் நிகழ்ச்சி நிரலை மேற்கொள்வதற்காக இந்த இடமாற்றத்தை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கிறார்.
இடமாற்றத்தின் பின்னணி
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பான கருத்து எழுந்தபோது முண்டியடித்துக் கொண்டு இந்த இடமாற்றம் செய்தே ஆக வேண்டுமென ஆளுநர் கூறியமை எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
வெளிமாவட்டங்களுக்கு ஆசிரிய பங்கீடு அவசியம் என்பதை ஆசிரியர் சங்கம் எப்போதும் கூறி வருகிறது. அதற்கு எதிராக செயல்பட்டதும் இல்லை. ஆனால் வெளி மாவட்டமே செய்யாத பல ஆசிரியர்கள் அரசியல் கட்சியின் செல்வாக்குடனும், உயர் அதிகாரிகளின் செல்வாக்குடனும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் தங்கியிருக்க சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற போர்வையில் முறையற்ற இடமாற்றங்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வடக்கு கல்வியை திட்டமிட்ட முறையில் அழிப்பதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வடமாகாண ஆளுநரும் உடந்தையாக இருக்கிறார். அதற்கான பல ஆதாரங்களை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
யாழ்ப்பாணத்தில் உயர் தர விஞ்ஞான பிரிவில் ஆங்கில மொழி மூலமான ஆசிரியரை பாடமே இல்லாத வலயம் ஒன்றுக்கு இடமாற்றம் வழங்கி இருக்கிறார்கள்.
இதன் பின்னணி என்ன யாழ்ப்பாணத்தின் உயர்தர விஞ்ஞான பிரிவை திட்டமிட்ட முறையில் அழிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டமே இந்த இடமாற்றத்தின் பின்னணி.
ஆகவே கொட்டும் மழையில் இந்த ஆசிரியர்களின் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்படுகின்ற நிலையில் தொடர்ச்சியாக எமது கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மோசமான வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவசர எச்சரிக்கை


